போற்றுதற்குரிய பேரறிஞர்,
"மொழி ஞாயிறு" ஐயா தேவநேயப்பாவாணர் அவர்களின் அன்புமகன் ஐயா தே.மணிமன்றவாணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
ஐயா தேவநேயப்பாவாணர் அவர்களின் மொழி ஆராய்ச்சி பணிகளுக்கு உற்றதுணையாக உதவி புரிந்ததுடன், ஐயாவின் வாழ்க்கை வரலாற்றையும் 'பாவாணர் நினைவலைகள்' என்ற நூலாக வெளியிட்ட பெருமைக்குரியவர்.
அன்னைத்தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஐயா தே.மணிமன்றவாணன் அவர்களின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பாகும்.
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா தே.மணிமன்றவாணன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




