அன்புத்தம்பி மாரிசெல்வராஜ் அவர்கள் தயாரித்து, இயக்கியுள்ள #வாழை திரைப்படம் மிகச்சிறப்பாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தம்பி மாரி செல்வராஜ் அவர்கள் தம் இளம்வயதில் நிகழ்ந்த கனத்த சோகத்தைப் பசுமைமாறா நினைவுகளுடன், வாழையடி வாழையாக இம்மண்ணில் வளர்ந்த வர்க்கப் புரட்சியையும் சேர்த்துச் சொல்லும் காவியமாக ‘வாழை’ திரைப்படத்தைப் படைத்தளித்துள்ளார்.
பணிச்சூழல் காரணமாகப் படத்தினை உடனடியாக என்னால் பார்க்க முடியாவிட்டாலும், சிவநைந்தணாக வரும் பொன்வேல், சேகராக வரும் ராகுல், பூங்கொடி ஆசிரியையாக வரும் நடிகை நிகிலா விமல் மற்றும் 'கர்ணன்' ஜானகி, கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோரின் உணர்வுப்பூர்வமான இயல்பான நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்படுவது படத்தைப் பார்க்க வேண்டும் என்ற பேராவலை எனக்குள் தூண்டுகிறது.
சகோதரர் சந்தோஷ் நாராயணனின் மனதை வருடும் இசையும், பாடல்களும், தம்பி தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், தம்பி சூர்யாவின் படத்தொகுப்பும் விமர்சகர்களால் பாராட்டப்படுவது படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. 'வாழை' திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்!
தன் வலி சுமந்த வாழ்வியல் அனுபவங்களையே கலைப்படைப்புகளாகத் தரும் தம்பி மாரிசெல்வராஜ் அவர்களுக்கு, பரியேறும்பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களைத் தொடர்ந்து ‘வாழை’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படைப்பாக அமைந்துள்ளதற்கு என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
உலகெங்கும் பரவி வாழும் தமிழ்ச்சொந்தங்கள் ‘வாழை’ திரைப்படத்தைத் திரையரங்கிற்குச் சென்று கண்டு ரசிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
@mari_selvaraj @Music_Santhosh @thenieswar
@KalaiActor @Nikhilavimal1 @dhivya_dhurai





