தென்காசியில் பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல்!

14

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பை பார்த்த பிறகும் தமிழ்நாடு காவல்துறையினர் எந்த பாடமும் கற்றுக்கொள்ளாது, மனச்சான்று இன்றி அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது வெட்கக்கேடானது.

கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ திறனற்ற காவல்துறை, கள் இறக்கும் எளிய மனிதர்களைக் கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல தேடித்தேடி வேட்டையாடுவது கொடுங்கோன்மையாகும். அப்பாவிகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும், குற்றங்களைத் தடுப்பதிலும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் காட்டியிருந்தால்,
சட்டம் – ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும்.
உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத ‘கள்ளை’ போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழ்நாடு அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில் டாஸ்மாக்கில் விற்பதற்குப் பெயர் என்ன? புனிதத் தீர்த்தமா? அரசு நடத்தும் மதுக்கடைகளில் மது அருந்துவோருக்குப் பாதுகாப்பாக காவலுக்கு நிற்கும் தமிழ்நாடு காவல்துறையினர், ‘கள்’ இறக்கும் எளிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைப்பதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மருத்துவ குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது. ‘தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் பனங்கள்ளை உணவாக வகைப்படுத்தி, உணவுக் குறியீடு “ரி001” வழங்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கள்ளை தங்களின் சிறப்பு உணவுப் பட்டியலில் வகைப்படுத்தியுள்ளன. உலகின் பல நாடுகளும் தங்களின் பாரம்பரிய உணவாக கள்ளை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்கத் தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை எதற்கு? கள்ளின் மீதான தடையை நீக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்த 23.01.26 அன்று தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் பனைத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, பொய் வழக்கு புனைந்து கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 20ஆம் நாள் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான அன்புச்சகோதரர்கள் சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்ததோடு ‘ஆடைகளைக் களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் காவல் நிலையத்தில் அமரவைத்ததோடு, பனைத் தொழிலாளர்கள் எளிதில் பிணையில் விடுதலை ஆகிவிடக்கூடாது என்பதற்காக, கள்ளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமலே உள்நோக்கத்துடன் ‘நச்சு கலந்த கள்ளை விற்பனை செய்ததாக’ பொய் வழக்கு புனைந்தனர். அதிகார மமதையோடு காவல்துறை நிகழ்த்திய அக்கொடுமைகளை அப்போதே நான் கடுமையாக கண்டித்ததோடு, திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகளும் பனைத் தொழிலாளர்களை விடுவிக்க போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு கொடுத்தது யார்? யாருடைய உத்தரவின் பேரில் தமிழ்நாடு காவல்துறை பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது? சாராய முதலாளிகளின் தூண்டுதலாலேயே பனைத் தொழிலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடுமைகள் நாளும் அரங்கேறுகின்றன. இக்கொடுமைகளை எதிர்த்து, பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் கட்சிகள் எதுவும் குரல் கொடுக்காதது ஏன்? ஏனெனில் சாராய ஆலைகளை நடத்துவதே திமுக, அதிமுக
கட்சியினர்தானே?
பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக போராடி, அவர்களின் நியாயமான உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒற்றைப் பெரும் அரசியல் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி  மட்டுமே உள்ளது. கள் இறக்குவதற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக போராடியும் வருகிறது. சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’, எங்களின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல, அது எங்களின் உரிமையுமாகும். பனைத் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் புரிகின்ற இக்கொடுமைகள் எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள். வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

தம்பி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மீது, கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்வதோடு, வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

 

 

Exit mobile version