ஈழத்தாயகத்தில் கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களைக் காக்க புலம்பெயர் தமிழர்களும் வாழ்வாதார உதவிகள் புரிய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்! – சீமான்

3

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழைப்பொழிவில் சிக்கி ஈழம் மற்றும் இலங்கையில் வாழும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு வாழும் தமிழ் மக்கள் பலர் தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.

பாதுகாப்பாக தங்க வைக்க போதிய முகாம்கள் கூட இல்லாத நிலையில் மட்டைப்பந்தாட்ட மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிகழ்வு மனதைக் கனக்கச்செய்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

தங்கள் உடமைகளை இழந்து தவிக்கும் தமிழர்களை இப்பேரிழப்பிலிருந்து மீட்க தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உடனடியாக உரிய வாழ்வாதார உதவிகள் புரிய வேண்டுமெனவும், அதோடு, இலங்கை வானூர்தி நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக உணவு கூட கிடைக்காமல் தவித்து நிற்கும் 150 தமிழர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட மக்களைப் பாதுகாப்பாக தாயகம் மீட்டுவரவும், அதுவரை அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உடனடியாக வழங்கவும் ஒன்றிய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச்சொந்தங்கள், கனமழை வெள்ளத்தால் ஈழத்தாயகத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்விற்குத் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகள் புரிய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

https://x.com/Seeman4TN/status/1994793649826402527?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி