நீரில் எரியும் அடுப்பு: இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

3

நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், அன்புத்தம்பி இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாகச் சுத்தமான நீரினைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டுச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீரில் எரியும் அடுப்பினை, தம்முடைய 20 ஆண்டுகால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக அன்புச்சகோதரர் இராமலிங்கம் கார்த்தி அவர்கள் கண்டுபிடித்துச் சாதனை புரிந்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

நீரினை எரிபொருளாகக் கொண்ட சமையல் அடுப்பினைப் பயன்படுத்துவதன் மூலம், இனிவருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துவிடும். அந்த வகையில் இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயற்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும்!

நீரில் எரியும் அடுப்பு எனும் அரிய கண்டுபிடிப்பினை மனித குல பயன்பாட்டிற்குத் தந்துள்ள HONC நிறுவனர் அன்பிற்குரிய சகோதரர் இராமலிங்கம் கார்த்தி, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள பேரன்பிற்குரிய அண்ணன், நடிகர் சரத்குமார் மற்றும் இக்கண்டுபிடிப்பில் பங்காற்றிய ஆய்வுக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி