முகப்பு தலைமைச் செய்திகள்

இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தம்பி விஷ்ணுவர்தனுக்கு சீமான் வாழ்த்து!

149

நாம் தமிழர் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச்செயலாளர் ஆருயிர் இளவல் ஜெயக்குமார் அவர்களின் அன்பு மகன் விஷ்ணுவர்தன் அவர்கள், மராத்திய மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து அளவற்ற பெருமிதம் அடைந்தேன்.

இளம் வயதில் தொடர்ந்து 4வது முறையாக இந்திய அளவிலான பதக்கங்களை வென்று பிறந்த தமிழ் இனத்திற்கும், பேணி வளர்த்த தாய் தந்தையருக்கும் பெருமை சேர்த்துள்ள அன்பு மகனின் சாதனை தனிப்பட்ட முறையில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்ற பிள்ளைகளின் தனித்திறன்களைக் கண்டறிந்து அதில் அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் அரசியற் கொள்கையை தம் வாழ்வியல் நெறியாகவே வரித்துக்கொண்டு மகனை சிகரம் தொட வைத்துள்ள ஜெயக்குமார் – வனிதா இணையருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமகன் விஷ்ணுவர்தன் அவர்கள் இனி வரும் காலங்களில் பற்பல பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று மேன்மேலும் சாதனைகள் புரிய எமது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

https://x.com/Seeman4TN/status/1742900173074989507?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version