பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்ற உங்கள் கைகளுக்கு மனம் நெகிழ்ந்த என் அன்பு முத்தங்கள்! இப்பணி தொடரட்டும்..! – சீமான் வாழத்து

221

என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

தொடர்ந்து பெய்து வருகின்ற பெருமழையால் நீர் வடியாமல், வெள்ளப் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் நீர் புகுந்ததனால், உறங்க முடியாமல், பசிக்கு உண்ண உணவின்றி, குடிக்க நீரூமின்றி, குழந்தைகளுக்குக் கொடுக்கப் பாலுமின்றி, வீடுகளில் மின்சாரம் இல்லாமல் கொசுக்கடியில் பரிதவிக்கும் நம்முடைய மக்களுக்குத் தொடர்ந்து நீங்கள் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றீர்கள்..

இப்பணி தொடரட்டும்..!

“மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகின்ற கைகளைத்தான் இறைவன் அதிகமாக நேசிக்கிறார்” – என்கிறார் அன்னை தெரேசா அவர்கள்.
எனவே, என் அன்பிற்குரிய தம்பி, தங்கைகள், அருமைப் பெற்றோர்கள், நான் பெரிதும் நேசிக்கின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தங்களால் இயன்றதை இக்காலச்சூழலில் நம் மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று அன்போடு வேண்டுகிறேன்.

நவம்பர் 26 – நம்முடைய தலைவர் பிறந்தநாள், நவம்பர் 27 – மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பிறகு, நானும் உங்களோடு தொடர்ந்து களப்பணியில் இணைவேன் என்கிற உறுதியைத் தருகிறேன்.

உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கமும் நன்றியும்!

உதவிக் கொண்டிருக்கின்ற உங்கள் கைகளுக்கு மனம் நெகிழ்ந்த என் அன்பு முத்தங்கள்!

நாம் தமிழர்!

இப்பணி தொடரட்டும்..! - சீமான் வாழ்த்து

Exit mobile version