முகப்பு கட்சி செய்திகள்

தமிழினத்தின் முதல் எதிரி காங்கிரஸ் – புதுவையில் செந்தமிழன் சீமான் பேட்டி.

101

தமிழரின் முதல் எதிரி காங்கிரஸ் கட்சிதான். இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியை தோற்கடிப்பது நமது முதல் கடமை, என்று தெரிவித்துள்ளார்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்  சீமான்.
புதுவை மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் புதுவையில் நடந்தது. கூட்டத்தில் செந்தமிழன்  சீமான் கலந்து கொண்டு பேசுகையில், “சுதந்திரத்திற்கு பின் ஏறத்தாழ 50 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் ஆண்டுள்ளது. தமிழகம்- புதுவையில் பல்வேறு கட்சிகள் ஆண்டுள்ளன. அவர்கள் நமது உணர்வுகளை மழுங்கச் செய்துவிட்டனர்.

இப்போது மாற்று அரசியல் இயக்கத்தை நாம் தொடங்கியுள்ளோம். தமிழரின் முதல் எதிரி காங்கிரஸ்தான். வருகிற சட்டசபை தேர்தலில் அந்த கட்சி சார்பில் எங்கெங்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்களோ அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும். இதற்காக மாற்றுக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்.
நான் தேசத்துக்கு பெரிய அச்சுறுத்தல் என்கின்றனர். என்னை சிறை  வைப்பதில் குறியாக உள்ளனர். நமது இயக்கத்தில் இருப்பவர்கள் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது. வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது. தனிநபர் துதிபாடி கோஷம் எழுப்பக்கூடாது. அதே போல் மாலை, சால்வைகளும் அணிவிக்கக்கூடாது. அதற்கு பதிலாக புத்தகங்கள் தரலாம்.

புத்தகம் கொடுத்தவர்கள் பெயரை எழுதிவைத்து நூலகங்களில் வைக்கலாம். எல்லோர் வீட்டிலும் தமிழர் உண்டியலை ஏற்படுத்தி நிதி சேகரித்து தொழில் தொடங்கவும், நலத்திட்டங்களுக்கும் தரலாம்.
புதுவையில் தமிழ் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்தப்படவில்லை. தமிழகத்தில் கோர்ட்டில் தமிழில் வாதாட முடிய வில்லை. தமிழில் படித்தால் வேலையில்லை. நாம் தமிழை சோற்றுக்காக படிக்க வில்லை. உணர்வுக்காக படிக்கிறோம். தமிழ் இனம் வாழ தமிழில் படிக்க வேண்டும்…”, என்றார்

Exit mobile version