முருகேசன் – கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது! ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

215

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் – கண்ணகி இணையரை ஆணவப் படுகொலை செய்திட்ட வழக்கில் 13 பேரைக் குற்றவாளிகளென அறிவித்து, தண்டனை வழங்கியிருக்கும் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன். மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது!

‘கண்ணகி மதுரையை எரித்து நீதிகேட்டது போல, முருகேசன் – கண்ணகி வழக்கின் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கும் நீதி ஆணவப்படுகொலையை எரிக்கட்டும்’ என அறச்சீற்றத்தோடு தீர்ப்புரை எழுதிய நீதியரசரது நீதிநெறி போற்றும் மாண்பைப் பெரிதும் போற்றுகிறேன். இதற்காக சமரசமின்றி சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட வழக்கறிஞர் ரத்தினம் தலைமையிலான குழுவினருக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!

தமிழர்களைப் பிளந்து பிரிக்கும் கோடாரிக்காம்பான சாதி எனும் வெறிப்பிடித்து, மனிதர்களைக் கொன்று புசிக்கும் ஆணவப்படுகொலையை முற்றாக ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

Exit mobile version