முகப்பு தலைமைச் செய்திகள்

பொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை

349

09-03-2021 மீஞ்சூர் | பொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்த பரப்புரையின் தொகுப்பு – நாள் – 2 (1)

படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை – சீமான் பேச்சு

தீய அரசியலை ஒழித்து ஒரு தூய அரசியலை உருவாக்கவேண்டும் என்ற மிக உயர்ந்த லட்சிய நோக்கத்திற்காக, புரட்சிகர அரசியல் மாறுதலுக்காக உங்கள் பிள்ளைகள், நாம் தமிழர் என்ற கட்சியை உருவாக்கி இந்தக் களத்திலே நிற்கிறோம். அறிவை கொடுக்கும் கல்வி, உயிரைக் காக்கும் மருத்துவம் ஆகியவை வியாபாரமாகிவிட்டன. அனைத்து உயிர்களின் தேவையான குடிநீர் வியாபார சந்தைப் பொருளாக மாறிவிட்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை இரு மடங்காக உயரும். இதற்குக் காரணம் எண்ணெய் நிறுவனங்களே எரிபொருள் விலையைத் தீர்மானிக்கலாம் என்ற அரசுகள் எடுத்த கொள்கை முடிவில் ஏற்பட்ட பிழை. நாம் முதலாளிகளின் நலனுக்கான அரசை நிறுவப்போகிறோமா, அல்லது நாட்டுமக்களின் நலனுக்கான அரசை நிறுவப்போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் இது.

 

திமுகத் தலைவர் ஸ்டாலின் தனிநபர் வருமானத்தை 4 லட்சத்திலிருந்து, 37 லட்சமாக மாற்றுவோம் என்று சொல்லியுள்ளார். 4 லட்சம் தனி நபர் வருமானம் என்று யார் சொன்னது? சரி அதை எப்படி 37 லட்சமாக உயர்த்துவீர்கள்? என்பதற்கு ஸ்டாலின் விளக்கம் சொல்வாரா?. 37 லட்சமாகத் தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்ட பிறகு, எதற்காக வீட்டிற்கு 1000 ரூபாய் வழங்கப் போகிறீர்கள்? ஸ்டாலின் 1000 ரூபாய் என்றார். எடப்பாடி 1500 என்கிறார். பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு அந்த 1000 ரூபாய் பணத்தைக் கொடுக்க அரசுக்கு எங்கிருந்து பணம் வரும்? அதை எவ்வகையில் ஈட்டுவீர்கள் ? பதில் உள்ளதா ? 21 ஆம் நூற்றாண்டிலும் எம்மின மக்களை 1000, 1500, 2000 ரூபாய்க்குக் கையேந்தும் பிச்சைக்காரர்களாக நிறுத்தியுள்ளீர்கள்.  இதுதான் இவர்கள் ஆட்சிகளின் சாதனையாக இருக்கிறது. உங்கள் பிள்ளைகள் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது ஐந்நூறு, ஆயிரம் தரமாட்டோம். பல ஆயிரங்களைச் சம்பாதித்துக்கொள்ள வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருவோம். படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை. இனி படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது எங்களின் அடுத்த வேலை. வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம்  ஊழல், இலஞ்சத்தை ஒழிப்போம். வேளாண்மை செய்வதை அரசுப்பணியாக மாற்றுவோம். மக்களாகிய உங்களை நம்பித்தான் இந்தக் களத்தில் நிற்கிறோம். எல்லோரையும் நம்பி நம்பி ஏமாந்த எங்களை ஏமாற்றமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் நிற்கிறோம். இந்தப் பொன்னேரி தொகுதியில் போட்டியிடுகிற என் தங்கை மகேஸ்வரி அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றிப்பேறச் செய்யுங்கள். உழவு இல்லையென்றால் உணவு இல்லை , உணவு இல்லை என்றால் உயிர்கள் இல்லை, உயிர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை. அதனால் உழவை மீட்போம், உலகைக் காப்போம் ! என்ற முழக்கத்தை முன்வைத்து ‘விவசாயி’ சின்னத்தை ஏந்தி உங்களை நோக்கி வந்துள்ளோம். நாங்கள் முன்னெடுப்பது எளிய மக்களின் புரட்சி. புரட்சி எப்போதும் வெல்லும் : நாளை மலரும் நாம் தமிழர் அரசு அதைச் சொல்லும். நன்றி வணக்கம். நாம் தமிழர்.

09-03-2021 மீஞ்சூர் | பொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி ஆதரித்து சீமான் பரப்புரை Seeman #Ponneri #Minjur

Exit mobile version