தொல்.திருமாவளவன் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுக்கும் மத அடிப்படைவாதிகள்! – சீமான் கடும் கண்டனம்

1365

அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்ற பெரும்பாவலன் பாரதியின் முழக்கத்திற்கு ஏற்ப, மனிதர்களை மனிதர்களாய் பாராது வருணப்பேதத்தின் மூலம் பிரித்தாண்டு; ஒடுக்கித் தாழ்த்தி வீழ்த்தத் துடிக்கும், பெண்களை இழித்துரைக்கும் மனுதர்மத்தின் கொடியக் கோட்பாடுகளை எடுத்துரைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது தனிமனிதத்தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று அவதூறுப்பரப்பரையில் ஈடுபடும் அக்கயவர்களின் கொடுஞ்செயல் துணிவற்ற கோழைத்தனமாகும்.

மனுதர்மத்தின் கோர முகத்தைத் தோலுரித்து நாளை (24.10.2020) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுக்கவிருக்கும் அறப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களது போராட்டம் வெல்ல வாழ்த்துகிறேன்!

பெண் விடுதலை இல்லையேல்; மண் விடுதலை இல்லை!
– தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version