முகப்பு கட்சி செய்திகள்

இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா கலந்துகொள்வதா? புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.

66

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்  நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையை காமன்வெல்த்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தி புதுவை சிங்காரவேலர் திடலில் பொதுகூட்டம் நடந்தது. முன்னதாக முத்தியால்பேட்டையில் இருந்து சிங்காரவேலர் திடலை நோக்கி நாம் தமிழர் கட்சியினர் எழுச்சி பேரணி நடைபெற்றது.  நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகளும்,புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் சார்ந்த நாம் தமிழர் கட்சியினரும் பொது மக்களும் திரளாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:–

மனித உரிமை, பண்பாடு, கலை, சட்டம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படுகிறது. இவை எதுவும் இல்லாத இலங்கையில் எதற்கு காமன்வெல்த் மாநாடு நடத்தப்பட வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் இனவெறி போராட்டம் நடந்தது. அதற்காக அந்த நாடு காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதற்காக பாகிஸ்தான் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இலங்கையில் 1½ ஆண்டுகளில் 1ž லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் நடைபெற்றது போர்குற்றம் அல்ல. அந்த போரே குற்றம். எனவே இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்.

தங்கை இசைப் பிரியாவை போல ஆயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் கொடுமைக்குள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்த பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இன்று தமிழன் அனாதையாக நிற்கிறான்.

இலங்கை ராணுவத்தால் 520 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய அரசோ இலங்கை கடற்படைக்கு 2 போர்கப்பல் பரிசாக வழங்குகிறது. இது எந்த வகையில் நியாயம்?

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்தால் ராஜபக்சே அதன் செயல் தலைவராக 2 ஆண்டுகள் இருப்பார். இதன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் இருந்து தப்பி விடுவார். ராஜபக்சேவின் குற்றங்களை மறைக்க இந்த மாநாடு நடக்கிறது.

மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. இது தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அரசு முடிவு எடுக்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

தமிழர்களின் உணர்வை மதிக்காமல் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் பாராளுமன்ற தேர்தலில் சரியாக பாடம் புகட்டுவோம். மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு சீமான் பேசினார்.

Exit mobile version