முகப்பு தமிழீழச் செய்திகள்

வவுனியாவுக்கு ஒரு அமைச்சு கேட்டு சம்பந்தனுக்கு கடிதம்.

38

மூவின மக்களும் வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வட மாகாணசபையில் அமைச்சு பதவியொன்று அவசியமானது என வட மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது; வவுனியா மாவட்டமானது வட மாகாணத்தின் எல்லையாகவும் மூவின மக்கள் வாழும் பிரதேசமாகவும் அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் தலைநகரமாகவும் விளங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள். இதற்கு மேலாக நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் நாம் எதிர்பாக்காத வகையில் சிங்கள இனத்தை சேர்ந்த அரச தரப்பு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழர்களுக்கும் பெரும் சவாலாக அமையும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

ஆகவே எமது எதிர்கால் செயற்பாட்டை எமது பிரதேசத்தில் வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளதால் அமையவுள்ள மாகாண அமைச்சில் ஓர் அமைச்சை எமது மாவட்டத்திற்கு வழங்குவதனால் பாதிக்கப்பட்ட சமூகம் எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்கவும் கட்சியை பலப்படுத்துவதற்குமாக எமது மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், கடந்த காலங்களில் வன்னிப்பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்த இயற்கை அனர்த்தங்களின்போது வைத்திய அதிகாரியாகவும் மனிதாபிமான நிறுவனங்களிலும் அளப்பறிய சேவையாற்றி இவர் சிறந்த முகாமையாளராகவும் செயற்பாட்டாளராகவும் விளங்கியுள்ளார்.

எனவே இவரது கடந்த 15 வருட கால அனுபவம் அமைச்சொன்றை சிறந்த முறையில் செற்படுத்துவதற்குள்ள தகுதியை கொண்டுள்ளமையை மேலும் உறுதி செய்கின்றது என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version