முகப்பு தமிழீழச் செய்திகள்

இலங்கை பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது – த இந்தியன் எக்ஸ்பிரஸ்

57

சிறீலங்கா தொடர்பில் இந்தியா இரட்டை வேடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்திய அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக இலங்கையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் சபை, மேற்குலகத்தின் அனுசரணையுடன் முன்வைத்ததை இந்தியா மௌனமாக பர்த்துக்ககொண்டிருக்கின்றது. சிறீலங்காவில் பொருளாதார, அரசியல் மற்றும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாடுகளை இந்தியா  கொண்டிருக்கின்றபோதும், அது ஐ.நாவின் நடவடிக்கைகளை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் போது, ரஸ்யா தனது ஆதரவுகளை சிறீலங்கா அரசுக்கு வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

ஆனால் சீனாவும் சிறீலங்காவுக்கான தனது ஆதரவுகளை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஐ.நாவின் அறிக்கை தொடர்பில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்திய பிரதமருடன் தொலைபேசியில் பேசியதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். அறிக்கை இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டபோதும், அது தொடர்பில் இந்தியப் பிரதமர் பதில் தெரிவிக்கவில்லை.

அறிக்கை பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்னர் இந்திய அதிகாரியான ஹார்டீப் பூரி என்பவர் ஆலோசனைக்குழுவை சந்தித்துள்ளதாக சிறீலங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே நிபுணர் குழுவின் நடவடிக்கை தொடர்பில் புதுடில்லிக்கு தகவல்கள் தெரியும். அறிக்கையில் என்ன உள்ளது என்பதையும் அவர்கள் முன்கூட்டியே அறிந்துள்ளனர். ஆனால் அதனை தடுப்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை.

எனவே இந்தியா இரட்டை நாடகம் ஆடுவதாக சிறீலங்கா அரசு வலுவாக நம்புகின்றது. 1987 ஆம் ஆண்டு ஏற்பட்டது போல ஒரு நெருக்கடியான நிலையை சிறீலங்காவுக்கு ஏற்படுத்த இந்தியா விரும்புகின்றது.
தம் மீது ஆதிக்கம் செலுத்துவதையே இந்தியா எப்போதும் விரும்புவதாக சிறீலங்கா அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். மகிந்தா அரசினால் இந்தியா சந்தித்துவரும் நெருக்கடிகளின் வெளிப்பாடே இந்தியாவின் மௌனத்திற்கான காரணம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :ஈழம் நியுஸ்

Exit mobile version