தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! – சீமான் பேரழைப்பு

792

நாள்: 18.11.2020

தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து
இனமான பணியாற்றிடுவோம்!

அன்பின் உறவுகளுக்கு,
வணக்கம்!

தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி, இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து, தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வுகளில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்.

தொற்றுநோய் பேரிடர் காலமான இக்காலத்தில் பெரும் புகழ் கொண்ட நம் தலைவரின் பிறந்தநாளில் நாம் வழங்கும் குருதி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலேயே அதிகக் குருதிக்கொடை தருகிற அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி தான் திகழ்கிறது எனக் குருதிக்கொடை பெறுகிற தொண்டார்வ நிறுவனங்கள் புள்ளிவிபரங்களோடு தெரிவிக்கின்றன.

அவ் வகையில் தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் மாசற்ற தலைவனின் பிறந்த நாளில்.. மக்கள் உயிர் காக்க நம் குருதியைக் கொடையாகத் தந்து நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்.

மாவீரர் சிந்திய குருதி.. வெல்வது உறுதி.
 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம்  தமிழர் கட்சி

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திநாங்குநேரி சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்