370, 35 ஏ சிறப்புச்சட்டங்கள் காஷ்மீரிய மக்களுக்கு இந்தியா இட்ட பிச்சையல்ல! அது அவர்களது தார்மீக உரிமை! – டெல்லியில் முழங்கிய சீமான்

243

செய்திக்குறிப்பு: 370, 35 ஏ சிறப்புச்சட்டங்கள் காஷ்மீரிய மக்களுக்கு இந்தியா இட்ட பிச்சையல்ல! அது அவர்களது தார்மீக உரிமை! – டெல்லியில் முழங்கிய சீமான் | நாம் தமிழர் கட்சி

காஷ்மீரி தேசிய இன மக்களின் உரிமைகளை ஆதரித்து சீக்கியர்களும் தமிழர்களும் இணைந்து நேற்று (26.09.2019) காலை டெல்லியில் நடத்தத் திட்டமிருந்த தேசிய இனங்களின் ஒற்றுமை அணிவகுப்புப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு டெல்லி காவல்துறை கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்தது.

இத்தடையை மீறுவது என்று முடிவு செய்த நிகழ்ச்சிக் குழுவினர் அகாலி தளம் (அமிர்தசரஸ்) தலைவர் ஐயா சிம்ரஞ்சித் சிங் மாண் தலைமையில் சீக்கியர் கோயிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு மத்திய தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றனர்.

ஐநூறுக்கும் மேற்பட்ட சீக்கியர்களும், நாம் தமிழர் கட்சி – டெல்லி உறவுகளும் ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கு மேற்பட்டோரும் பங்கேற்ற இந்த எழுச்சிப் பேரணி, மத்திய தலைமைச் செயலகத்திற்கு சற்று முன்னால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இப்பேரணியில், “தல் கல்சா” டெல்லி தலைவர் ஐயா கிரிப்பால் சிங் சீமா, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், டெல்லி மனித உரிமை அமைப்புத் தலைவர் ஐயா ஜக்மோகன், காசுமீர் மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி டெல்லி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமூகத்திற்கான மாணவர்கள் (Students for Society), பஞ்சாப் சீக்கிய இளைஞர்கள் (Sikh Youth of Punjab), அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் குழு (Committee for the Release of Political Prisoners) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பினரும், காஷ்மீரி – நாகாலாந்து தேசிய இன மாணவர்களும் பேரணியில் பங்கு கொண்டனர்.

பிற்பகலில் பேரணியின் முடிவில், டெல்லியிலுள்ள ஐ.நா. தகவல் தொடர்பு நடுவத்தில் ஐ.நா. தலைமைச் செயலாளருக்கான மனு அளிக்கப்பட்டது. இதிலும், இந்திய அரசின் அற்பத்தனமான தலையீடு இருந்தது.

முதலில், ஆறு பிரதிநிதிகள் நேரில் வந்து சந்திக்கலாம் என்று அனுமதித்த ஐ.நா. தகவல் நடுவம், திடீரென்று பூட்டப்பட்டிருந்த அலுவலக வாசலுக்கு வெளியில் மனுவைப் பெற்றுக் கொள்ள கீழ்நிலை அலுவலர் ஒருவரை அனுப்பியது.

இதை ஏற்க மறுத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஐயா ஜக்மோகன், கடுமையாக வாதிட்டார். பேரணி குழுவை உள்ளே அனுமதிக்கவில்லையென்றால், எல்லோரும் அலுவலக வாயிலிலேயே அமர்ந்து மறியல் செய்வோம் என்று அறிவித்தார். அதன்பிறகு, ஐந்து பேரை அனுமதிப்பது என்று ஏற்றுக் கொண்டார்கள்.

ஐயா சிம்ரஞ்சித் சிங் மாண் தலைமையில், “தல் கல்சா” டெல்லி தலைவர் ஐயா கிரிப்பால் சிங் சீமா, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், காசுமீர் மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்று ஐ.நா. தலைமைச் செயலாளருக்கான மனுவை டெல்லி – ஐ.நா. தகவல் நடுவத் தலைமை அதிகாரி இராஜீவ் சந்திரசேகரிடம் அளித்து மனு குறித்து விளக்கமளித்தனர்.

ஐ.நா. மன்றத்தில் 1948இல் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட அடிப்படையில், காஷ்மீரி மக்களிடையே அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து வாக்கெடுப்பு (Plebiscite) நடத்த வேண்டுமென்று ஐயா சிம்ரஞ்சித் சிங் மாண் எடுத்துரைத்தார்.

அதற்கு மறுப்பு விளக்கமளித்த இராஜீவ் சந்திரசேகர், “1972இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், இரு நாடுகளும் பேச வேண்டும்” என்றார். இதற்கு மறுப்புத் தெரிவித்த சிம்ரஞ்சித் சிங் மாண், “வங்கதேச விடுதலையில் இந்தியா நேரடியாகத் தலையிட்டு அந்நாடு விடுதலை பெற்றபிறகு, படை வகையிலும் – பொருளியல் வகையிலும் – அரசியல் முனையிலும் பாகிஸ்தான் பலவீனப்பட்டிருந்த நேரத்தில் செய்து கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் சமநிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் அல்ல. வார்சா ஒப்பந்தம் போல திணிக்கப்பட்ட ஒப்பந்தம்! வார்சா ஒப்பந்தத்திற்குப் பிறகு ஜெர்மனி, பேராயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. இதேநிலைதான், சிம்லா ஒப்பந்தத்திலும் இருக்கிறது” என்றார்.

அப்பொழுது குறுக்கிட்டுப் பேசிய ஐயா கி. வெங்கட்ராமன், “இப்பிரச்சினையின் அடிப்படையான காஷ்மீரிகளையே ஈடுபடுத்தாமல், அவர்கள் கருத்து என்ன என்று கேட்காமல் இரண்டு ஆக்கிரமிப்பாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் செய்து கொண்ட ஒப்பந்தம் எப்படி சர்வதேச நீதி வழங்கும்? ஐ.நா. பறைசாற்றல்கள் (Charters) கூறும் தேசிய இனங்களின் தன்னுரிமை (Right to Self Determination of Nationalities) என்ற அடிப்படையில்தான் ஐ.நா. மன்றம் இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் எங்கள் மனுவில் கூறப்பட்டுள்ள செய்தி! உடனடியாக அங்கு நிலவும் நெஞ்சை நெறிக்கும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர – சிறைபட்டுக் கிடக்கிற தலைவர்களையும், இளைஞர்களையும், குழந்தைகளையும் விடுதலை செய்ய – ஊடக சுதந்திரத்தை மீட்க – ஐ.நா. மன்றம் தலையிட வேண்டும் என்பதுதான் எங்கள் உடனடிக் கோரிக்கை” என்று விளக்கினார்.

“நாளை (2019 செப்டம்பர் 27), ஐ.நா. பொது அவை கூடுவதால் இன்று (26.09.2019) மாலையே ஐ.நா. தலைமைச் செயலாளருக்கு உங்களுடைய மனு அனுப்பி வைக்கப்படும்” என்று இராஜீவ் உறுதியளித்தார். “நீங்கள் விளக்கிச் சொன்ன உணர்வுகளையும் ஐ.நா. தலைமையகத்துக்கு தெரிவிப்பேன்” என்று உறுதியளித்தார்.

தகவல்: கண்ணோட்டம் http://www.kannottam.com/2019/09/blog-post_26.html

முன்னதாக பேரணியின் போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது,

தமிழ்த்தேசிய இனத்திற்கென்று ஒரு தாயகத்தைக் கட்டுவதற்காகப் பன்னெடுங்காலமாக போராடிய ஓர் இனத்தின் மக்கள் நாங்கள். எம் கண்முன்னே எமது இனமும், அதன் விடுதலைப்போராட்டமும் அழித்தொழிக்கப்பட்டது. வலி தாங்கிய இனத்தின் மக்களாக நாங்கள் நிற்கிறோம். எங்களால்தான் பிறிதொரு தேசிய இனத்தின் வலியை உணர முடியும். அன்று ஈழத்தில் என்ன நடந்ததோ அதுதான் இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது. 370, 35 ஏ சிறப்புச்சட்டங்கள் என்பது இந்தியா காஷ்மீரிய மக்களுக்கு இட்ட பிச்சையல்ல! அது அவர்களது தார்மீக உரிமை. அந்தச் சிறப்புச்சட்டத்தின் அடிப்படையில்தான் காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. அந்த இணைப்பும் தற்காலிகமானதுதான்! காஷ்மீரில் இருக்கும் இசுலாமியர்களெல்லாம் இந்தியர்கள் என்றுகூறி தங்களோடு இணைய வலியுறுத்துகிற இவர்கள், மற்றப் பகுதிகளில் இருக்கும் இசுலாமிய மக்களை அந்நியர்கள் எனக் கூறி பாகிஸ்தானிற்குச் செல்லச் சொல்கிறார்கள். இதனை எப்படி ஏற்க முடியும்?

எந்த முடிவை இவர்கள் எடுத்திருந்தாலும் காஷ்மீர் மக்களின் உடன்பாட்டோடுதான் எடுத்திருக்க வேண்டும். அம்மண்ணின் சனநாயகக் குரல்களாக இருந்த காஷ்மீரியத் தலைவர்களையெல்லாம் வீட்டுச்சிறையில் வைத்துவிட்டு, இராணுவத்தைக் குவித்து அம்மண்ணின் மக்களைத் திறந்தவெளி சிறையில் வைத்துகொண்டு, அவர்களுக்கு விடுதலைகொடுத்துவிட்டதாகப் பேசுவதைப் போன்றே ஒரு ஏமாற்று வேறொன்றுமில்லை. இந்தியா என்கிற ஒரு நாடு இருந்ததில்லை; உருவாக்கப்பட்டது. இந்தியா என்பது பல்வேறு தேசங்களின் ஒன்றியம் என்பதனை மறைக்க முயல்கிறார்கள் நாட்டையாளுகிற ஆட்சியாளர்கள்.

இங்கு மட்டுமல்ல உலகெங்கும் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்காகக் குரலெழுப்பப்படுகிறதோ அங்கெல்லாம் அவர்களின் குரலோடு இணைந்து தமிழ்த்தேசிய இன மக்கள் நாங்களும் குரலெழுப்புவோம். ஏனென்றால், அடக்குமுறைக்கு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமை நிலையிலிருந்து விடுதலைக்காகவும், தன்னுரிமைக்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கிற இன மக்கள் நாங்கள். அந்த அடிப்படையில் காஷ்மீரிய மக்களின் துயரத்திற்காகக் குரலெழுப்ப வேண்டிய காலக்கடமையும், வரலாற்றுப்பணியும் எங்களுக்கிருக்கிறது. அதனால்தான், குரல்வளை நெரிக்கப்பட்டு நிற்கிற காஷ்மீரிய மக்களுக்காகச் சீக்கியச் சொந்தங்களுடன் தமிழ்ப்பிள்ளைகள் நாங்களும் இணைந்து இப்பேரணியில் பங்கேற்று போராட்டம் செய்கிறோம். நாகலாந்து போன்ற இன்னும் பல்வேறு தேசிய இனங்களை இணைத்துக் கொண்டு அடுத்தகட்டப் போராட்டத்தை விரிவாக்கம் செய்து விரைவில் நடத்துவோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திவிக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் (புதுச்சேரி) இடைத்தேர்தல் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு
அடுத்த செய்திமாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்த விக்கிரவாண்டி வேட்பாளர் கு,கந்தசாமி