தைப்பூசத்தையொட்டி திருமுருகன் குடில் அமைத்து சீமான் வேல்வழிபாடு – வீரத்தமிழர் முன்னணி

698

கட்சி செய்திகள்: தைப்பூசத்தையொட்டி திருமுருகன் குடில் அமைத்து சீமான் வேல்வழிபாடு – வீரத்தமிழர் முன்னணி  | நாம் தமிழர் கட்சி

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நமது இன மூதாதை! முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றும் தைப்பூசத் திருநாளில் (21-01-2019) நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்புக்கான பாசறையானவீரத்தமிழர் முன்னணியைச் சேர்ந்த சென்னை, மதுரவாயல் உறவுகள் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில்திருமுருகன் குடில் அமைத்து முப்பாட்டன் முருகனின் திருவுருவச் சிலையும் வேலும் நிறுவி வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தமிழர் மெய்யியல் முறைப்படி உறுதிமொழியேற்று வேல்வழிபாடு செய்தார். பின்னர் அனைவருக்கும் தினைமாவு உருண்டை, சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

தைப்பூசம் மற்றும் வேல்வழிபாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இறைவனே இந்த உலகத்தைப் படைத்தார், அவரே எல்லா உயிரினங்களையும் படைத்தார், அவரே எல்லாவற்றையும் செய்வார், அவரே ஆட்டுவிப்பார், அவரே ஆடுவார் என்ற மாயக் கற்பனைக் கதைகளில் சிக்கி அலைவது, அதே மாயக்கதைகளை நமது வருங்கால சந்ததிக்கு சொல்லி வைப்பது அல்ல எங்களுடைய இறையோனின் தேடல். நீண்ட வரலாற்றை கொண்ட இந்தத் தமிழ் சமுதாயத்திற்கு எல்லாமே இயற்கையாகவே அமைந்துவிட்டது. அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல், மொழி, அதன்வழி வந்த இலக்கியம் என எல்லாம் பெற்று இந்த புவி மாந்தரில் கோலோச்சிய இனம் இந்தத் தமிழ் இனம். அந்த இனத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனும் இருக்கிறார். அந்த இறையோனே தமிழர் இறை முருகன் ஆவார்.

தமிழர் வாழும் நிலங்களில் எல்லாம், தமிழர் குடும்பங்களில் எல்லாம் முருகனின் பெயர் சுமந்து காணப்படுவது, தமிழர் வாழ்வில் முருகன் இரண்டற கலந்ததற்கான சான்று. அப்படிப்பட்ட தமிழர் இறை முருகனை தை மாதம் 7 ஆம் தேதி(21/01/2019) தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுதும் பரவி வாழ்கிற தமிழர்கள், தமிழ் இறையோன் குறிஞ்சி நிலத்தலைவன் தமிழர் இறை முருகனை வணங்கி, முருகனின் பெரும்புகழைப் போற்றி கொண்டாட இருக்கிறோம்,

அந்த பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறக்கும் வகையில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் குடில் அமைத்து முருகனே வடிவான “வேல்” ஐ நிறுவி வழிபட இருக்கிறோம், வேல் என்னும் சொல் ‘வெல்’ என்னும் அடிச் சொல்லிலிருந்து தோன்றியது. வெல் என்றால் வெற்றி பெறு என்பது பொருள். எனவே வேல் என்றால் வெற்றி. அந்த வேல் எடுத்து வரலாற்று தொன்மை மிக்க தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாடு மற்றும் வழிபாட்டு விழுமியங்களை மீட்டெடுப்போம்.

ஆகையால் உறவுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் தை 5,6, மற்றும் தைப்பூச நாளான தை 7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து “வேல்” நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்தி சிற்றுண்டி உணவுகள் வழங்குமாறு நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, மற்றும் அனைத்து பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். வெல்வழிபாட்டிற்கு என்று வீரத்தமிழர் முன்னணி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேல்வழிபாட்டு நெறிமுறைகளின் படி, தங்களின் ஊர்களில் முருகன் குடில் அமைத்து அதில் வேலினை வழிபட வேண்டுகிறேன்.

தமிழரின் விடுதலை, தமிழர் பண்பாட்டு விடுதலையில் இருக்கிறது. தமிழர் பண்பாட்டின் விடுதலை என்பது கலப்படமற்ற தமிழர் வழிபாட்டில் இருக்கிறது. அவற்றை வேல்வழிபாட்டின் மூலம் மீட்டெடுப்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅமீரகத் தலைநகர் அபுதாபியில் 7ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா