யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்

48

யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்.

இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள் அரங்குக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் அவர்கள், யாசின் மாலிக் கடலூருக்கு எப்படி வந்தார், அவரை அழைத்து வருவதற்கு உதவி செய்த சக்தி எது? அந்த நிகழ்ச்சி பின்புலமாக இருந்து செயல்பட்ட இயக்கங்கள் எவை என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், இந்தியாவை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதியான யாசின் மாலிக்கை தமிழகத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது என்று கூறியுள்ளார். இதற்கெல்லாம் பதிலும் விளக்கமும் அளிக்க வேண்டிய கடமை நாம் தமிழர் கட்சிக்கு உண்டு என்பது மட்டுமின்றி, இந்தத் தலைவர்களுக்கு சில கேள்விகளையும் நாம் தமிழர் கட்சி எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது.

காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அது இன்றளவும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. யாசின் மாலிக்கும், அவரது இயக்கமும் காஷமீர் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருகிறார்கள். அது காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கும், அதன் அரசியல் தலைமைக்கும் இந்திய நாட்டில் எங்கு சென்றும் கருத்துக்களை கூற உரிமை இருக்கிறது. அது இந்திய அரசியல் சட்டப்பூர்வமானது.

காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? தமிழ்நாட்டை போல காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தானே? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று நீங்கள்தானே முழங்கினீர்கள். அது உண்மையானால் எனது காஷ்மீர் சகோதரனை இங்கே அழைத்து வந்த பேச வைப்பதில் உங்களுக்கு என்ன சங்கடம்? அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்? காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பிரதமராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றுள்ள பிரதமர் வரை, நீங்கள் கூறக்கூடிய அந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச அனுபவம் வாய்ந்த இந்திய அரசு அதிகாரியை நியமித்து பேசி வருவது ஏன்? நாங்கள் அழைத்து பேச வைத்தால் குற்றம், இந்திய மத்திய அரசு அவர்களோடு பேசினால் சரியா? இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காய்?

ஈழத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை போட்டு ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப் படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேயை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறீர்களே, அது இந்த தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? தமிழினத்தை கொன்று குவித்த அந்நிய நாட்டுத் தலைவனை அழைத்து அரசு மரியாதை கொடுப்பதுதான் தேச பக்தியா? தேசப் பக்தியாளர் ஞானதேசிகன் பதில் சொல்லட்டமே. கடந்த 35 ஆண்டுகளாக கச்சத் தீவு கடற்பகுதியில் 544 மீனவர்களை கொன்று குவித்துள்ள சிங்கள கடற்படையின் தலைவரான ராஜபக்சவிற்கு ராஜ உபசாரம் செய்வது தமிழர்களை வெறுப்பேற்றாதா? பிரிவினைக்கு வித்திடாதா? ஞானதேசிகன் பதில் சொல்லட்டும்.

இந்த நாட்டின் செல்வத்தை அந்நிய பெரு நிறுவனங்களும், நாடுகளும் கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு ஏற்ற வகையில் கொள்கை வகுத்துக்கொடுத்துக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கூறும் தேச பக்தி. காங்கிரஸ் அரசின் அனைத்து பொருளாதார சுரண்டல் கொள்கைக்கும் ஒத்துப்போகும் தேச பக்தியைத்தான் பாரதிய ஜனதா கடைபிடிக்கிறது. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும் இந்தக் கட்சிகள்தான் தேசப்பற்றை பற்றி பேசுகின்றன. நாங்கள் தேசப்பற்றைப் பற்றி பேசவில்லை, இந்த தேச மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறோம்.

தமிழீழத்தில் எம் தமிழினம் எப்படி திட்டமிட்டு இன்றளவும் அழிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல் காஷ்மீரிலும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று யாசின் மாலிக் கூறினாரே, அதற்கு உங்கள் பதில் என்ன? இந்திய படைகள் தங்கள் மண்ணில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி, அம்மக்கள் நடத்திய பெரும் போராட்டம் இந்த நாட்டிற்கே தெரியும். ஆனால் அந்த மக்களை இந்தியர்கள் என்றா பார்த்தது இந்திய மத்திய அரசு. துப்பாக்கியால் சுட்டு 104 பேரைக் கொன்றது.

அரசமைப்புப் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு அதிகமான சிறப்பு சலுகைகளை கொடுத்து அம்மாநிலம் செழிப்புடன் உதவி வருவதாக பொன் இராதாகிருஷ்ணன் கூறுகிறார். அப்படியானால் அந்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவது ஏன்? அம்மாநிலத்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் எனும் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்திய இராணுவம் எந்த வீட்டில் வேண்டுமானாலும் நுழைந்து யாரை வேண்டுமானாலும் விசாரணைக்குத் தூக்கி செல்லலாம் என்கிற நிலையை இன்று வரை அனுமதிக்கிறீர்களே ஏன்? இராணுவத்தால் அம்மாநிலத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியதே அதற்கு இந்த தேச பகதர்களின் பதில் என்ன?

காஷ்மீராகட்டும், பழங்குடியினரை வேட்டையாடும் தண்டகாரண்ய காடுகள் ஆகட்டும், இந்த நாட்டில் எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி அதை எதிர்க்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக அவர்களோடு நின்று உரிமைக் குரல் கொடுக்கும். நாம் தமிழர் இந்திய அரசமைப்பை ஏற்று ஜனநாயக பாதையில் இயங்கிவரும் கட்சி. இலங்கையில் எம்மினத்தின் விடுதலைக்காகவும், இந்தியாவில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடும் அரசியல் கட்சி என்பதை தெட்டத் தெளிவாக, ஆவணப்பூர்வமாக விளக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கட்சியை தங்கள் கட்சியாக நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் தேசியக் கட்சிகள் எங்கள் மீது கூறும் குற்றச்சாற்றுகள் எந்த அடிப்படையும் அற்றது என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இவர்கள் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறார்கள். இது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. இறையாண்மை என்பதற்கு உண்மையான பொருள் என்ன என்பதை அறியாத, புரியாத தலைவர்களுக்கு நாங்கள் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
அடுத்த செய்திசீமான் கடலூர் பொதுக்கூட்டம்_18_5_13