மறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் – சீமான் அறிக்கை.

36

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்தான்.அதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.ஈழத்தில் தமிழினம் பேரினவாதப் பெருவெறிக்குப் பலியாவது பொறுக்காமல்-அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்டவர்களைக் கண்டு மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து அவர்களைத் தண்டித்தான். அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான். ’சா வரினும் நாற்காலியை விட்டுப் பிரியேன்’ என்ற “பதவிப்பித்தர்“ கருணாநிதி அவர்களுக்கும், ’எவன் தடுத்தும் இனவெறியை இழக்கேன்’ என்ற சிங்களப் பேரினவாதிகளுக்கும், ’தமிழரை அழிப்பதன்றி வேறு வேலை எமக்கில்லை’ என்று அறைகூவி நம்மை அழித்த இந்திய வல்லாதிக்க வல்லுாறுகளுக்கும் அவன் உயிராயுதத்தால் ஒரு பாடம் புகட்டினான். நாம் அந்த மாவீரனை மண்ணுக்காகப் பலிகொடுத்தோம். முத்துக்குமாரைத் தொடர்ந்து 16 உயிர்கள் தன்னுயிர் ஈந்தும் ஆட்சியாளர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை,அவர்களின் ஆணவமும் எதேச்சதிகாரமும் முடிந்து போகவில்லை என்பது உண்மைதான்.

தமிழனின் உயிர் என்பது அவர்கள் அளவில் உதிரும் மயிருக்குச் சமானம்.எனவே தான் உலகமே அதிர்ந்த முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்னமும் பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி கேட்கிறது ஆட்சி அதிகாரம். அதன் தொடர்ச்சியாகத் தினசரி கடலில் மீன் பிடிக்கும் தமிழனைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.ஆட்சி அதிகாரத்தின் முன் எம் லட்சியங்கள் தற்காலிகமாகத் தோற்றுப் போயிருக்கலாம்.நம் இனத்தை பகைவர்கள் சூழ்ந்திருக்கலாம்.ஆனால், அவனது சிதையில் எரிந்த நெருப்பு எங்கள் சிந்தைகளில் இன்னமும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருப்பதை அதிகாரங்கள் அறியாது.முத்துக்குமாரின் லட்சியம் அனைத்தும் இன்றில்லையேல் என்றாவது அடைவது உறுதி.அதற்காக எத்தனை தடை வந்தாலும் எதிர்நோக்கத் தயாராய் இருக்கிறோம்.முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்து எமது பயணத்தைத் தொடருவோம்.

முந்தைய செய்திவீர தமிழ் மகன் முத்துகுமாரின் மரண சாசனம் – காணொளி இணைப்பு
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.