மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

66

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (26-04-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாகச் சிறைப்பட்டிருப்பது மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15ந் தேதி சென்னை ராணிசீதை மகாலில் நடைபெற்ற ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அண்ணன் வைகோ அவர்கள் தமிழீழதில் அரங்கேறிய இனப்படுகொலையை பற்றி மிக உருக்கமாகவும் அதற்கு காரணமான அன்றைய சிங்கள-இந்திய கூட்டு சதியை பற்றி மிக தெளிவாகவும் பேசினார். அந்த கூட்டத்தில் பங்குபெற்றவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் அன்றைய கூட்டத்தில் அண்ணன் வைகோ அவர்களின் மிகச்சிறந்த உரையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது.

அப்பேச்சைத்தான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக திரிக்கப்பட்டு அன்றைய திமுக அரசால் அவர் மீது தேசத்துரோக வழக்குப் புனையப்பட்டது. இதன்விளைவாக, அவரது கடவுச்சீட்டும் முடக்கப்பட்டது. வழக்கு தொடுக்கப்பட்டு 8 வருடங்களுக்கு மேலாகியும் முடித்து வைக்கப்படாததால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில்சென்று வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, பிணையை மறுத்துச் சிறைசென்றுள்ளார் அண்ணன் வைகோ.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களையோ, அதன் தலைவர்களையோ ஆதரித்துப் பேசுவது குற்றமில்லை என ஒருமுறைக்குப் பலமுறையாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுப்படுத்தியுள்ளது. இறுதிகட்ட ஈழப்போரின்போது, ஈழப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைத்ததற்காக என் போன்றோர் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்குகளிலும்கூட அவ்வகைத் தீர்ப்புகளே வெளிவந்திருக்கின்றன. அப்படியிருக்கையில், அண்ணன் வைகோ மீது தொடுக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டவிதிமுறைகளுக்கே எதிரானது; சனநாயகத்தின் அடிநாதமான கருத்துரிமைக்கே உலைவைக்கிற செயலாகும். ஈழப்படுகொலையை மூடி மறைக்கவும், அதற்கெதிராய் குரலெழுப்புவோரின் குரல்வளையை நெறிக்கவும் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு தயவில் தமிழகத்தை ஆண்ட திமுக அரசு பயங்கரவாதத்தின் கொடுங்கரம் கொண்டு அடக்குகிற செயலாகவே இவ்வகை வழக்குகள் தொடுக்கப்பட்டன என்பதே காலம் உணர்த்தும் உண்மை.

சர்வதேச அரங்கில் தமிழர்களின் சார்பாக வலிமையான குரல்கள் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழகத்தில் தொடர்ந்து ஈழ தமிழர்களின் போராட்டத்திற்கு துணை நிற்கும் தலைவர்களின் கடவுசீட்டுகள் திட்டமிட்டு முடக்கப்படுகிறது. அப்படித்தான் அண்ணன் வைகோ அவர்களின் கடவுசீட்டு என்னுடைய கடவுசீட்டு ஆகியவை முடக்கப்பட்டது. இது அப்படட்டமான நீதிக்கு புறம்பான செயல். இவ்வழக்குகள் சட்டப்படியும், நியாயப்படியும் நிலைநிறுத்த தக்கதல்ல என்பதால், உடனடியாக நடத்தி முடிக்க இயலும். ஆனால் இவ்வழக்கினை அரசின் தரப்பு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இதன்மூலம், இவ்வழக்குகளுக்குப் பின்புலத்தில் இருக்கும் அரசியல் உள்நோக்கத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம். ஆளும் வர்க்கங்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் இவ்வித வழக்குகளைத் தொடுத்து அதிகாரத்தினைத் தவறாகப் பயன்படுத்தி வருவது தமிழக ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும், இது வன்மையான கண்டனத்திற்குரியது.

எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் ஒரு அசாதாரணச் சூழலும், அரசியல் பெருங்குழப்பமும் நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் வாழ்வாதாரத்தினையும், நிலவளத்தினையும் நிர்மூலமாக்கும் திட்டங்கள் தமிழர் மண்ணில் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக, அனுபவங்கள் பல பெற்ற அண்ணன் வைகோ அவர்கள் இத்தகைய சூழலில் சிறைப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும். அவர் விரைவில் சிறைமீண்டு தமிழகத்தின் உரிமைகளுக்காகக் கருத்துரையாளராகவும், களப்போராளியாகவும் போராடும் தருணத்தை எதிர்நோக்குகிறோம். எனவே, அண்ணன் வைகோ அவர்கள் மீது தொடரப்பட்ட இப்போலியான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், அவருடைய கடவுசீட்டை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என்ற கோரிக்கைகளோடு அண்ணன் வைகோ அவர்கள் விடுதலைபெற்று தனது அரசியல், சமூகப் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றும் உளமாற விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதமிழ்ப்பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சரின் பதவியைப் பறிக்கவேண்டும் – சீமான் கண்டனம்
அடுத்த செய்திவறட்சியினால் இறக்கவில்லையென்று விவசாயிகளின் மரணத்தை மூடி மறைப்பதா? – சீமான் கண்டனம்!