போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள்! – கொழும்பில் பிளேக் வலியுறுத்தல்

14

இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கொழும்பு அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. இவ்வாறு கொழும்பில் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணைச்செயலாளர் பிளேக் தெரிவித்தார்.அதுவே நீடித்த அமைதியை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓபிளேக். மூன்று நாள் பயணமாக இலங்கை வந்த பிளேக் நேற்று அமைச்சர் பீரிஸ் மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அரச பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.

மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிளேக், தமிழ்ச் சிறுபான்மையினருடன் அரசியல் அதிகாரங்களைக் கொழும்பு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை உறுதியளித்திருக்கின்றது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

எனினும் “உறுதி மொழிகளில் அல்லாமல் செயலில் காட்ட வேண்டும்” என்றும் பிளேக் தெரிவித்தார்.உள்ளூர் அதிகாரிகள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறுவார்களாயின், சர்வதேச பொறிமுறை ஒன்றின் மூலம் அதனை நிறைவேற்ற வேண்டிவரும் என்றும் பிளேக் எடுத்துக் கூறினார்.முதலில் விசாரணைக்கான பொறுப்பை இலங்கை அரசு எடுத்துக் கொள்கிறதா என்பதை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கும் என்றார் அவர்.

முந்தைய செய்திஒற்றுமையுடன் போராடி வணிகர்கள் வெற்றி பெற வேண்டும் – சீமான்
அடுத்த செய்திஐ.நா போர்குற்ற அறிக்கை தொடர்பாக தமிழின விரோத போக்கை கடைப்பிடித்து வரும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.