பன்னாட்டு விசாரணையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழர் விரோத கட்சி தான்- நாம் தமிழர் கட்சி

101

பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா

 தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

இரண்டரை ஆண்டுக்காலப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அப்படிபட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிர்ப்புக் காட்டுவது வினோதமாகவுள்ளது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை அந்நாட்டு அரசுதான் நடத்த வேண்டும் என்றும் ரங்கராஜன் கூறியுள்ளார். இது கொலை செய்தவனிடமே விசாரணைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். பன்னாட்டு விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இலங்கை இறையாண்மையுள்ள ஒரு நாடு, அது இந்தியாவின் நண்பன் என்றும் ரங்கராஜன் கூறியுள்ளார். ஒரு நாட்டின் இறையாண்மை என்பது அது அந்நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் உரிமையா? என்று கேட்கிறோம். தமிழ்நாட்டின் மீனவர்கள் 540 பேருக்கு மேல் இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றே அதுதான் இந்தியாவின் நட்பு நாடு என்பதற்கு அத்தாட்சியா? மார்க்சிஸ்ட் கட்சி பதில் சொல்லட்டும்.

மார்க்ஸ் லெனின் கொள்கை வழி நின்றபதாக கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, தேசிய இனங்களின் சுய நிர்ணய போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கொள்கையை கைவிட்டுவிட்டதா என்று கேட்டதற்கு, அதை வெளியில் இருந்து திணிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புரிந்தும் புரியாததுபோல் பேசும் ஏமாற்றுச் சொற்களாகும். இலங்கையில் தமிழர்கள் நடத்திவருவது சுய நிர்ணய போராட்டம் அல்ல என்று கூறும் ஒரே மார்க்சியர் இவராகத்தான் இருக்க முடியும். அதுமட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் விருப்பத்தையறிய இலங்கையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறீகளா என்று கேட்டதற்கு, அதனை எதிர்ப்பதாகவும் ரங்கராஜன் பதில் கூறியுள்ளார்.

ரங்கராஜனின் பதில்கள் அனைத்தும் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதாக இருப்பது மட்டுமின்றி, மார்க்சிய கோட்பாடுகளுக்கு எதிரானதாகவும் இருப்பது வேதனையானது. தமிழின எதிர்ப்புப் போக்கை கடைபிடிக்கும் சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, ஒரு தமிழின விரோத கட்சி என்பதையும், அது உண்மையான மார்க்சிய கட்சி அல்ல என்பதையும் தமிழக மக்கள் புரிந்துக்கொண்டு இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைப் போல் மார்க்சிஸ்ட் கட்சியையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய செய்திஇந்தியாவும் தமிழினப்படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என்று நிரூபணமாகிவிட்டது: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி பேரணி/பொதுக்கூட்டம் – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!