தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (26-08-2016) காலை 11 மணிக்கு சென்னை போரூரை அடுத்த துண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள திரு.வி.க இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவர்களுடன், மண்டலச் செயலாளர் மு.வாசு, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் சிவக்குமார் மற்றும் தனஞ்செழியன், மாநில மகளிர் பாசறை செயலாளர் அமுதாநம்பி, திருவள்ளூர் கிழக்கு மண்டலச் செயலாளர் கோகுல், மாநில மாணவர் பாசறை செயலாளர்கள் கார்த்தி மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்றனர்.
திரு.வி.க. பிறந்த நாளையொட்டி சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முத்தமிழ்க் கடல்
தமிழ்த் தென்றல்
பெண்ணுரிமைப் போராளி
மத்திய தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர் தந்தை
அரசியல் அறிஞர்
தலைசிறந்த பேச்சாளர்
எழுத்தாளர்
சமரச சன்மார்க்க அருளாளர்
பொதுவுடைமை சிற்பி
ஐயா திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்களினுடைய பிறந்தநாள் இன்று
தாய்மொழியாம் தமிழில் பேசுவதும் எழுதுவதும் இழுக்கு இழிவு
அந்நிய மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவதே அழகு சிறப்பு
என்று எண்ணித் தமிழர் வாழ்ந்த காலத்தே வாழ்ந்தவர் திரு.வி.க.
எளிய தமிழை, இனிய தமிழை, இன்பத் தமிழைத் தெருவெங்கும் மேடைகளில் எல்லாம் பரப்பிய பெருமை தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களையே சாரும்.
இந்தி மொழியை எதிர்த்தார்
பிறமொழி கலப்பற்ற தனித்தமிழை போற்றினார்
செந்தமிழில்
அவர் பேசாத பொருள் இல்லை
எழுதாத எழுத்தில்லை
சிந்திக்காத சிந்தனையில்லை
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தன் வாழ்வின் பேச்சும் மூச்சும் தமிழ்
தன் இதயத்துடிப்பெல்லாம் தமிழ் தமிழென்றே வாழ்ந்தவர்
தமிழ்த்தென்றல் திரு.வி.க
அவரின் சொற்பொழிவுகள்
உணர்ச்சி பிழம்பு
உள்ளத்தைத் தட்டியெழுப்பும் போர் முரசம்
அன்பின் பெருக்கம்
அருளின் ஊற்று
எளிமையின் இருப்பிடம்
எழுச்சியின் கொள்கலன்
அறிவியல் வீழ்ச்சி
ஆடிவரும் தென்றல்
அந்தப் பெருந்தகையின் பிறந்தநாளில் அவருக்கு நம்
புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம். நாம் தமிழர்!- இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது