தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் உறுதுணையார் நின்றவர் இயக்குனர் மணிவண்ணன்

44

தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் உறுதுணையார் நின்றவர் இயக்குனர் மணிவண்ணன்: நாம் தமிழர் கட்சி இரங்கல் 

 

50 திரைப்படங்களை இயக்கியும், 400க்கும் மேற்பட்ட படங்களில் நடத்தும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்த இயக்குனர், நடிகர் மணிவண்ணன் மறைவுற்றது தமிழ்த் திரைப்படத் துறைக்கு மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சிக்கும் ஈடு செய்த முடியாத பேரிழப்பாகும்.

இயக்குனராகவும், நடிகராகவும் மட்டுமே பரவலாக அறியப்பட்ட எங்களின் பாசத்திற்குரிய மணிவண்ணன் ஐயா அவர்கள், மிகப் பெரிய கொள்கைவாதிவாதியாவார். பொதுவுடைமைக் கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அவர், இளமையில் பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர். இறுதி வரை அக்கொள்கையில் உறுதியாக நின்றவர்.

இலங்கையில் தமிழினம் திட்டமிட்ட இன அழித்தலுக்கு உள்ளாக்கப்பட்டபோது, தனித்து முன் வந்து தனது கருத்தைக் கூறியவர். ஈழத் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்ததை எதிர்த்து துணிந்து பேசியவர். தமிழீழ விடுதலையை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் தியாகத்தை புகழ்ந்து பேசியவர். தமிழ்நாட்டு மக்கள் மனதில் இனப் பற்றையும், தமிழ்த் தேசியத்தையும் ஆழமாக விதைத்தவர்.

பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் அவருடைய மேடைப் பேச்சு, தமிழினம் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒரு தெளிவை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு உறுதுணையாய் நின்ற தலைவர்களில் மணிவண்ணன் ஐயா ஒருவர். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மணிவண்ணன் ஒரு சீரிய சிந்தனையாளர், சிறந்த பகுதறிவாளர், ஆழந்த தமிழினப் பற்றாளர், தெளிந்த தமிழ்த் தேசியவாதி என்பதோடு, வழிகாட்டியாய் கருதத்தக்க மனிதாபிமானியாவார். தமிழினத்தின் விடியலுக்காகவும், உரிமை மீட்பிற்காகவும் பெரும்பங்காற்றிவந்த நிலையில் அவருடைய வாழ்வு முடிவெய்திவிட்டது எமது கட்சிக்கும் தமிழினத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

மணிவண்ணன் மறைவால் பெரும் துயரை சந்தித்துள்ள அவருடைய குடும்பத்தாருக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு போகாமல் தடுப்போம்
அடுத்த செய்திஈழத் தமிழர்களை வதைக்கும் க்யூ பிரிவின் அராஜகத்தை தடுத்து நிறுத்த மக்கள் சக்தியை திரட்டுவோம்