சுற்றறிக்கை: மார்ச்-23, வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)

124

சுற்றறிக்கை: மார்ச்-23, வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்) | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 22-03-2019 வெள்ளிக்கிழமை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுவால் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க ஒவ்வொரு வேட்பாளரும் கூடுதலாக இரண்டு வேட்புமனுக்களை தேர்தல் அலுவலகத்தில் வாங்கிக்கொண்டு 25-03-2019 திங்கட்கிழமை அன்று மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

23-03-2019 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களுடன் தேர்தல் பரப்புரை குறித்த கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்கூட்டத்திற்கு மாநில / மாவட்ட / தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பேரெழுச்சியாகக் கூடுமாறு அழைக்கிறோம்.

வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாநில / மாவட்ட / தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் அன்றிரவு சென்னையிலேயே தங்கியிருந்து மறுநாள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்களுடன் தேர்தல் களப்பணி குறித்த கலந்தாய்வில் கட்டாயம் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முந்தைய செய்திநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030038