கபட நாடகம் ஆடும் தங்கபாலுவுக்கு சீமான் எச்சரிக்கை.

42

560 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப்படை இதுவரை கொன்று குவித்திருக்கிறது. இவ்வாறு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முழு முதற் காரணம் மத்தியில் ஆளூம் காங்கிரஸ் கட்சியே ஆகும்.

இதுவரை 560 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்ட பொழுதும் காங்கிரசுக் கட்சி தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. எங்கோ பிரான்சு நாட்டில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்கு தனி விமானம் ஏறி ஓடிச்சென்ற காங்கிரசுக் கட்சியின் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது தலைவி சோனியாவும், இங்கு கூப்பிடு தூரத்தில் உள்ள ராமேஸ்வரத்திலும், நாகையிலும் தமிழ் மீனவன் உயிரிழந்து, தலை துண்டிக்கபபட்டு, கை கால்கள் இழந்து, சித்திரவதைக்கு சிங்கள ராணுவத்தால் உள்ளாக்கப்பட்டு, அவனது வலைகள் அறுக்கப்பட்டு நிர்க்கதியாய் கரை வந்து சேர்ந்த பொழுது என்ன செய்தது? மீனவனின் உயிரை மயிரளவுக்கும் கூட் மதிக்காமல் குறைந்த பட்சம் அவனுக்கு ஒரு ஆறுதல் கூடச் சொல்லாமல், அவனது எழவுக்கு நெற்றிப்பொட்டுக்கு ஒரு ரூபாய் கூடக் கொடுக்காமல் வேடிக்கை பார்த்தது.

தமிழர்களின் உயிரில் துளியும் அக்கறை இல்லாமல், அவர்களைத் தனது நாட்டின் குடிமகனாக கூடக் கருதாமல், சிங்களக் கடற்படை கொல்லும் பொழுது அதனைக் கண்டு கொள்ளாமலும் கொலைகல் செய்யும்  சிங்களனுக்குத் தொடர்ந்து நவீன ஆயுதங்களும், ரேடார்களும் அளித்தது மத்தியில் ஆளும் காங்கிரசுக் கட்சி ஆகும். மீனவர்கள் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாட்டில் குரல் கொடுத்தால் அவர்களை ஒடுக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தி சிறைக்குள் தள்ளும் கட்சி கொலை செய்த சிங்களக் கடற்படையின் அதிபருக்கு இந்தியாவில் ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்தது. இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கையை ஐ.நா.சபையே போர்க்குற்றம் புரிந்தது என்று தற்பொழுது அறிவித்துள்ளது.விரைவில் ஆயுதங்கள் அளித்த இந்தியாவும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும். இந்த கசப்பான உண்மைகள் அனைத்தும் காங்கிரசுக் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் தங்கபாலுவுக்கும் நன்கு தெரியும். ஆனால் தமிழர்களை மடையர்களாக எண்ணி உட்கட்சிப் பிரச்சனையிலும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தோல்வி அடையும் என்ற நிலையிலும் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு என்ற பெயரில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்துள்ளார். தங்கபாலுவுக்கு மீனவர்கள் பிரச்சனையில் காலம் கடந்தாவது அக்கறை வந்திருக்குமானால் அவர் உண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது இனி ஒரு மீனவரின் உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்று சில நாட்களுக்கு முன் உறுதிமொழி அளித்துச் சென்ற சோனியாவின் வீட்டின் முன்னால் தான். ஆனால் மக்களை ஏமாற்றவும் தனது பதவியைக்காப்பாற்றவும் நாடகம் நடிக்கிறார்.

இந்த நாடக வேடம் அவருக்குப் பொருந்த வில்லை. படு கேவலமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இருக்கிறது. தனது பதவியைக் காப்பாற்ற மீனவர்களின் மரணத்தைப் பயன்படுத்தும் இது போன்ற மிகவும் இழிவான செயல்களில் தங்கபாலு இனியும் ஈடுபடுவாரானால் அதனை நாம் அனுமதிக்க முடியாது. அவரது வீட்டு முன் நாம் தமிழர் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தும் என்று கடுமையாக எச்சரிக்கிறேன்.

முந்தைய செய்திதமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய தமிழக மீனவரின் உடல் – இலங்கை கடற்படை கொடூரம்.