என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு

66

மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் பரப்புரை செய்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்தப்பாடுபடுவேன் என்று பேசினார்.

மும்பை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ளத் தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி, சயான் கோல்லிவாடா ஆகிய இடங்களில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து 13ஆம் தேதி மாலை சீமான் பரப்புரை செய்தார்.

தாராவியில் 90 அடிச் சாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், காங்கிரஸூக்கு எதிராக தமிழர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இலங்கையில் ராஜபக்ச அரசு தமிழர்களை அழித்தொழிக்க நடத்திய இனப் படுகொலைப் போருக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுத்தும், ஆலோசனை வழங்கியும், ராடார் அளித்தும், நிதியுதவி, சிங்கள படையினருக்குப் பயிற்சி என்று எல்லா வகையிலும் உதவியதை எடுத்துரைத்த சீமான், “என் இனத்தை வேரோடு அழிக்கத் துணைபோன காங்கிரஸ் கட்சியை என்னுயிர் தமிழ்ச் சொந்தங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிக்க வேண்டும்” என்று கூறினார்.

“உண்மையான ஒவ்வொரு தமிழனும் இலங்கையில் தன் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து பழி தீர்க்க வேண்டும். இதற்கு மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தமிழனாவது வாக்களித்தால் அவனது பிறப்பை சந்தேகிக்க வேண்டும்” என்றும் கூறினார்.

தாராவியில் உள்ள 178 வார்டில், பாரதிய ஜனதா, சிவசேனா, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் உமேஷ் ஜெயவந்த் மகாலேக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக்கொண்டார். இதே பகுதியில் மற்றொரு வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 178வது வார்டில் போட்டியிட்டிருக்க வேண்டியவர் அப்பகுதி தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்ற முத்துராமலிங்கம் என்பவரே. ஆனால் அந்த வார்ட் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என்று ஒதுக்கப்பட்டுவிட்டதால், மராட்டியத்தில் தமிழர்கள் பொது பிரிவினர் என்று உள்ளதால், முத்துராமலிங்கம் போட்டியிடும் வாய்ப்பை பெறவில்லை. எனவே, அவருடைய ஆதரவு பெற்ற உமேஷ் மகாலே போட்டியிடுகிறார்.

தாராவி பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்த பிறகு, சயான் கொல்லிவாடா பகுதியில் உள்ள 168வது வார்டில் பா.ஜ.க. கட்சி சார்பில் போட்டியிடும் தமிழரான கேப்டன் இரா.தமிழ்ச் செல்வனை ஆதரித்து சீமான் பரப்புரை செய்தார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, போரை நிறுத்துமாறு பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டவர் தமிழ்ச் செல்வன் ஆவார்.

இங்கும் சீமான் பேச்சை கேட்க தமிழர்களும், மராட்டியர்களும் பெருமளவிற்குத் திரண்டிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்தை பார்க்கும்போதெல்லாம் அது தமிழர்களைக் கொன்ற இரத்தம் படிந்த கை என்பதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று சீமான் கூறினார்.

“தமிழினப் பகைவனான இராஜபக்சாவுடன் சேர்ந்துக்கொண்டு ஒன்றேமுக்கால் இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ் அரசை மத்தியில் இருந்து மட்டுமல்ல, கர்நாடகம், ஆந்திரம், கேளரம், மராட்டியம், குஜராத் என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சென்று பரப்புரை செய்து தோற்கடிக்க முயற்சிப்பேன். இது சத்தியம்” என்று சீமான் முழங்கியபோது மக்களிடமிருந்த பலத்த கரவோலி எழும்பியது.

தமிழக மீனவர்கள் 550க்கும் மேற்பட்டோர் சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒருமுறை கூட கண்டிக்காத காங்கிரஸ் அரசு, எதற்காக தமிழினத்திற்குத் தேவை என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்தித்துப்பார்க்க வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டார். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழர்கள் ஒரு மனதுடனேயே சிந்திக்க வேண்டும் என்றும் அதுவே தமிழினத்தின் மீட்சிக்கு அவசியமானது என்றும் சீமான் கூறினார்.

“எந்த சின்னத்திற்காக சீமான் வாக்குக் கேட்கிறான் என்பதல்ல, எந்த எண்ணத்தின் அடிப்படையில் கேட்கிறான் என்பதே முக்கியம். என் இனத்தை அழித்தவனை அழிக்க மராட்டிய மண்ணில் வாழும் என் சொந்தங்களின் வாக்குப் பலத்தை சரியான திசையில் பயன்படுத்தியே காங்கிரஸ் கட்சியை வீழ்த்த இந்த பரப்புரையை செய்கிறேன்” என்று சீமான் கூறினார்.

சீமானுடன் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், ஊடகவியலாளருமான கா.அய்யநாதனும் இவ்விரு இடங்களிலும் பரப்புரை செய்தார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசனும், கலை பண்பாட்டுப் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பால முரளி வர்மனும் இக்கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி19 ஆவது நாளாகத் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான
அடுத்த செய்திதமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!