உழைக்கும் வர்க்கத்தை மேம்படுத்த உளமாற உறுதியேற்போம் – சீமான் வாழ்த்து!

147

மே தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

வியர்வையால் உலகைச் சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள் மே தினமாகும். நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக, நம் பாதுகாப்புக்காக நாள்தோறும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்க்கை காலாகாலத்துக்கும் கவலைக்கிடமாகவே இருக்கிறது. காடாகவும் மலையாகவும் கிடந்த உலகை வாழுமிடமாகவும், தெருவாகவும் வடிவமைத்தவர்கள் தொழிலாளர்களே. உலகின் வளர்ச்சியைத் தூக்கிச் சுமக்கும் முதுகெலும்புகளாக வாழும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கான வளர்ச்சி இன்றைக்குச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.

”பாலின்றி பிள்ளை அழும்
பட்டினியால் தாய் அழுவாள்
வேலையின்றி நாமழுதோம் – என் தோழனே
வீடு முச்சூடும் அழும்
காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா”

எனப் பாடிய தோழர் ஜீவாவின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்கக் கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.விவசாயம் தொடங்கி வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை ஆத்மார்த்தமாக அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றும் உழைப்பாளர்களை நம்மில் எத்தனை பேர் திரும்பிப் பார்க்கிறோம். காலங்காலமாக தூக்கிச் சுமந்த தோள்களைத் தூக்கியெறியும் நன்றி உணர்வற்ற உள்ளங்களாகவே நம்மில் பலரும் நடந்து கொள்கிறோம். தொழிலாளர் மேன்மையும் அவர்கள் வாழ்வுக்கான வளமையும் பெருக உலகத்தார் அனைவருமே இன்றைய நாளில் உறுதியேற்க வேண்டும்.
நமக்காகப் பாடுபடுபவர்களை கைதூக்கிவிட நாம் அனைவருமே உளமார உறுதி ஏற்க வேண்டும். ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ சக்தியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கத்தை மேம்படுத்த அரசும் எல்லாவித முனைப்புகளையும் காட்ட வேண்டும்.
தங்களுக்குள் ஒற்றுமை பெருக்கி எதையும் தட்டிக் கேட்கும் மகத்தான சக்தியாகவும், முன்னேற்றப் பாதையில் அடி வைக்கும் ஆளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதினகரன் கைதுக்குப் பின்னால் இருக்கும் மோடி அரசின் அதிகார அத்துமீறலைத் தோலுரிப்போம் : சீமான்
அடுத்த செய்திதம்பி தனஞ்செழியனின் மறைவு ஈடுசெய்ய முடியா பேரிழப்பு! -சீமான் இரங்கல்