இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை.

31

யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளி விவகார கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ம் திகதியிடப்பட்ட இந்த இரகசிய ஆவணத்தை இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானவை என குறிப்பிடப்பட்டுள்ளதோடு ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தில் முன்னெடுத்த இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக் கூறும் கடமைப்பாடுகளை நிறைவேற்றும் முயற்சிகளுக்கு இந்தியாதான் மிகுந்த தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பில் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு பகிரங்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என இந்திய மனித உரிமை கழகம் வலியுறுத்தியுள்ளதையும் தி.மு.க போன்ற கட்சிகளின் ஆதரவை இந்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பதையும் குறித்துள்ள மேற்படி அறிக்கை இவ் விவகாரத்தில் இந்தியா எத்தகையதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது கவனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளது.

வன்னிப் போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என உறுதிப்படுத்தியுள்ள இந்த ஆவணம் இலங்கை அரசாங்கம் மனித குலத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையால் விசேட நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும் எனவும், யூகோஸ்லாவியா, லைபீரியா போன்ற நாடுகளுக்காக உருவாக்கப்பட்டது போன்று இந்த நீதிமன்றம் அமையலாம் என்றும் இவ் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கையயழுத்திடாத போதிலும் கொழும்பு மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வகை செய்யும் ஜெனிவா ஒப்பந்தம் உட்பட குறைந்தது நான்கு முக்கியமான சர்வதேச ஒப்பந்தங்களில் இலங்கை கையொப்பம் இட்டுள்ளதாகவும் இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை ஆரம்பித்தால் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் நேரடியாக எதிர்க்காதெனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பாதுகாப்புப் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நடந்து கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார கொள்கை தொடர்பான இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திபோர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு.
அடுத்த செய்திசுபா.முத்துகுமார் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுகோட்டையில் நடைபெறவுள்ள உண்ணாநிலை போராட்டம்.