இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவைப் புறக்கணித்த தமிழக அரசுக்கு பாராட்டு : சீமான்

38

தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை புறக்கணித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:


இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவைப் புறக்கணித்த தமிழக அரசுக்கு பாராட்டு : சீமான்


தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

இலங்கைத் தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்றுக் குவித்துவிட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்துவிட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசிவருகிறது சிங்கள இனவாத ராஜபக்ச அரசு. சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக்கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்ச ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் நாளிதழ்களிலும் கூட செய்தியாக வந்துள்ளது.

ஆனால், ‘தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன’ என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டுவரும் இந்திய அரசு, அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும். ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுவதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலிகொண்டுவரும் சிங்கள பெளத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது.அதன் ஒரு வெளிப்பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.

தமிழினத்திற்கோ, தமிழ்நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்துவந்த வணிக வரிச் சலுகைகளை (ஜி.எஸ்.பி.+) (2) நிறுத்திவிட்டது. மனிதாபிமான உணர்வுடன் ஐரோப்பிய ஒன்றியம் கையாண்ட பொருளாதாரத் தடையால் 2 இலட்சம் சிங்களர்கள் வேலை வாய்ப்பு இழந்தனர். ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது.

அதுமட்டுமல்ல, இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகிவிடும், அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகிவிடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது. கருப்பர் இன மக்களை ஒடுக்கி வந்த இனவெறி தென்னாப்பிரிக்க அரசுக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பில் இருந்து கிரிக்கெட் புறக்கணிப்பு வரை அத்தனை அரசியல் புறக்கணிப்பு வழிகளையும் கையாண்ட இந்திய அரசு, அன்றைக்கு இப்படிப்பட்ட அரசியல் சால்சாப்புகள் எதுவும் கூறவில்லை. ஆனால் இலங்கை பிரச்சனையில் மட்டும் தொடக்கத்தில் இருந்தே தமிழின விரோத போக்கை இந்திய மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அதுதான் கப்பல் போக்குவரத்திலும் வெளிப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதாரத் தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது.

ஆனால் தமிழக அரசு தான் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இணங்க, கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை புறக்கணித்துள்ளது. முந்தைய அரசு போல் பெயருக்குத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு தமிழர்களை ஏமாற்றும் போக்கை இந்த அரசு கடைபிடிக்கவில்லை. தமிழ்நாட்டின் அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ எவரும் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவில்லை. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழக அரசு உறுதியாகவுள்ளதை இந்த புறக்கணிப்பு நிரூபிக்கிறது. தமிழக அரசின் புறக்கணிப்பு நடவடிக்கை தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகும். பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம்.

இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம், இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு, அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் பகுதி வரலட்சுமி நகர் பரப்புரை கூட்டம்
அடுத்த செய்திஇலங்கை தின்பண்டங்கள் புறக்கணிப்பை முன்னெடுக்கும் சென்னை இளைஞர்.