இதுவும் ஒரு வன்கொடுமைதான்! 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன? – சீமான் சீற்றம்

69

தமிழினப் போராளி பழநி பாபா அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக நேற்று 28.01.2020 மதுரை வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல்:-

கேள்வி: தமிழக அரசு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளதே..?

பதில்: ஆய்வுகளின்படி கடந்த ஐந்தாண்டுகளில் 81 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் தேர்வை எதிர்கொள்ள அச்சம் அல்லது தேர்வு முடிவுகளில் வந்த தோல்வியே ஆகும். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள்தான். 10, 12 ம் வகுப்பு படிக்கும் பதின்மப் பருவ மாணவர்களே மனமுதிர்ச்சியின்றித் தேர்வினால் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடக்கும் போது., அரசே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வை நடத்துவது எந்த வகையில் ஏற்புடையது..? அந்தத் தோல்வியை நம்முடைய குழந்தைகளின் பிஞ்சு மனங்கள் எப்படித் தாங்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழக அரசிடமும், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடமும் நாம் எழுப்பும் கேள்வி, இன்னும் இந்தியா முழுமைக்குமே அந்தச் சட்டம் வரையறுக்கப்பட்டுச் செயலாக்கத்திற்கு வருவதற்கு முன்பு, பிற மாநிலங்கள் எதுவுமே இன்னும் செயல்படுத்தாத போது, தமிழகத்தில் அவசர அவசரமாக 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை கொண்டு வருவதற்கான தேவை என்ன வருகிறது?

மூத்த மனநல மருத்துவர் ஐயா ருத்ரன் அவர்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் சரியாகப் படிப்பதில்லை என்றே அதிகளவில் பெற்றொர்கள் தம்மிடம் அழைத்து வருவதாகக் கூறுகிறார். ஆகவே 6 வயது, 8 வயது பிள்ளைகளை வன்புணர்வு செய்வது எப்படி உடல்ரீதியாகச் சிதைக்குமோ அப்படியே இந்தத் தேர்வுகள் குழந்தைகளை மனரீதியாகச் சிதைக்கும். எனவே இதுவும் ஒரு வன்கொடுமைதான். இந்தத் தேசத்தை ஆளும் தலைவர்களில் யாராவது ஒருவர் கூறுங்கள், உங்களில் யார் 5 மற்றும் 8ஆம் வகுப்புத் தேர்வினை எழுதினீர்கள்? இந்த நாட்டில் எத்தனையோ மாமேதைகள் பேரறிஞர்கள் எல்லாம் 5ஆம் வகுப்பு 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை எழுதித்தான் வந்தார்களா?

தேர்வு! தேர்வு! என்று நீட் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் நுழைவுத் தேர்வை வைக்கும் இந்தத் தேசத்தை ஆளும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தாங்கள் என்ன தேர்வை எழுதி தங்களது தகுதியை நிருபித்து வந்தனர்?

பாரம்பரிய விதைகளையே அந்நிய முதலாளிகளுக்கு விற்ற இவர்கள் பிஞ்சுகளைக் கூறுபோடமாட்டார்கள் என நினைப்பது அர்த்தமற்றது. நாம் பலமுறை இதைக் கைவிடவேண்டும் என்று பேசியாகிவிட்டது. நாங்கள் கேட்பது சுவர் இல்லாத கல்வி, தேர்வு இல்லாத தேர்ச்சி.
எட்டாம் வகுப்புவரை எந்தத் தேர்வுமே தேவையில்லை. ஒன்பதாம் வகுப்பில் ஒரு மாதிரி தேர்வு, பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்ற முறையே போதுமானது. அந்தக் கல்விமுறையே பல அறிஞர்களை உருவாக்கியுள்ளது. உலகிலேயே கல்வியில் முதலிடத்தில் உள்ள தென்கொரியா எட்டு வயதிலேயே தன் நாட்டின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கிறது. நாம் அந்த வயதில் பொதுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகிறோம். அதிகாரம் நிரந்தரமானது என்று நினைத்துக்கொண்டு தன்னிச்சையாக இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த நினைப்பது வேடிக்கையானது.

கேள்வி: குரூப்-4 தேர்வுகளில் முறைகேடு நடைபெற்று அரசு அதிகாரிகள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனரே?

பதில்: இதை வெறும் செய்தியாகக் கண்டும் காணாமல் எளிதாகக் கடந்துபோக முடியாது.
குரூப் 1,2,4 எனப் பல அரசுத் தேர்வாணையத் தேர்வுகளில் இந்த முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். அதில் நடவடிக்கை எடுக்கக் கோரினால், அப்படி முறைகேடாக வெற்றிப்பெற்றவர்கள் பலர் காவல் ஆய்வாளர் அளவுக்குப் பதவி உயர்வு பெற்று உயர் பதவிக்கு வந்துவிட்டனர் அவர்கள் பல கோப்புகளில் கையெழுத்து இட்டுள்ளனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தேவையற்ற பல குழப்பங்கள் ஏற்படும் என்கின்றனர். இந்த முறைகேடும் ஒரே தேர்வு மையத்தில் அதிகம் பேர் மிக அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளனர் என்பதைக் கண்டு சந்தேகமடைந்து தேர்வர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையிலேயே உண்மை தெரியவந்துள்ளது. எனில் எத்தனை காலமாக இந்த முறைகேடுகள் நடைபெற்று வந்துள்ளது? என்ற கேள்வி எழுகிறது. எல்லாவற்றிற்கும் தேர்வு தேர்வு என்கிறார்கள் இவர்கள், ஆனால் இவர்கள் வைக்கும் தேர்வே தகுதி அற்றவர்களை உருவாக்குவதாக உள்ளதே?

நீட் தேர்விலேயே ஆள்மாறாட்டம் செய்து முறைகேடாக வெற்றி பெற்ற செய்தி வெளியானதை பார்த்தோம். இந்தத் தேர்வின் மூலம் போலிகளைத் தகுதியற்றவர்களை மேலும் மேலும் உருவாக்கி கொண்டுள்ளீர்கள். ஏனெனில் ஊழல் இலஞ்சம் தேசியமயமாகிவிட்ட தேசமாக மாறிவிட்டதால் எல்லாமே பணம், எல்லாமே வியாபாரம் என்றாகிவிட்டது. இது ஒரு சந்தை! முழுதும் வர்த்தகமயமாகி விட்ட தேசத்தில் அனைத்தையுமே வியாபாரமாத்தான் நோக்குவார்கள். அதனால்தான் 15 இலட்சம் பெற்றுக்கொண்டு உதவினேன் என்று ஒரு பணியாளர் ஒப்புதல் அளிக்கிறார் எனில் உண்மையிலேயே படித்து, பெருத்த நம்பிக்கையோடு நேர்மையாகத் தேர்வு எழுதும் எம் தேசத்து இளைஞர்களுக்கு இந்த மண்ணில் என்ன மதிப்பு இருக்கிறது..? இந்தத் தேசத்தை உண்மையாக நேசித்து, தான் வெற்றி பெற்று வந்து இந்த மண்ணிற்கு மக்களுக்கு உளமார சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்தத் தேசத்தின் மகனுக்கு, மகளுக்கு என்ன மரியாதை உள்ளது?

கேள்வி: குரூப் 4 தேர்வில் தமிழ், ஆங்கிலம் தெரியாத தகுதியற்ற பிறமொழியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனரே?

பதில்: இதற்காகத்தான் நாம் இந்த முறைகளை ஒழிக்க முன்பே கூறினோம். நீட் தேர்வில் வெற்றி பெற்று நம் மாநில பிள்ளைகள் எத்தனை பேர் வெற்றி பெற்று மருத்துவம் படிக்கின்றனர் என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மருத்துவக் கட்டமைப்பு என்பது இந்த மண்ணின் மக்களின் வரியில் இந்த மண்ணின் மக்களுக்கு மருத்துவம் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டது; ஆனால் இப்போது யார் படித்துப் பட்டம் பெற்றுப் போகிறார்கள்?

தற்போது அரசு நியாய விலைக் கடைகள் மூலமாகக் கொடுத்த ஆயிரம் ரூபாயை வட இந்தியர்கள் வரிசையில் நின்று வாங்கியதை நாம் பார்த்தோம். ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்கின்றனர். 2 கோடி வெளி மாநிலத்தவர் குடியேறிவிட்டனர். அதே அளவு பொருட்களைத்தான் இன்னும் மத்திய அரசிடம் பெற்று விநியோகிக்கின்றனர். அளவை அதிகரிக்கவில்லை. எனில் இங்கு வெளிமாநிலத்தவர் முதலில் ரேசன் பொருட்கள் வாங்கிவிட்டால் பற்றாக்குறையினால் பெருமளவு பாதிக்கபடபோவது இந்த மண்ணின் மக்கள்தான். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்றால் இந்தியா ஒரே தேசமா, தேசங்களின் ஒன்றியமா? இந்த இடத்திலேயே மாநில உரிமைகளை இவர்கள் விட்டு கொடுத்துவிட்டனர்.

இவ்வாறு அந்த நேர்காணலில் சீமான் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு