கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்

81

கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான் – திருச்சி

கதிராமங்கலம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை, நேற்று 11-07-2017 திருச்சியில் வெளியிட்டார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆய்வு முடிவுகளை முன்வைத்துப் பேசிய சீமான், ‘கதிராமங்கலத்தில் உள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்தினால் புற்றுநோய், தோல் வியாதிகள் வரும்’ என எச்சரித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான இரண்டாம் கட்டப் போராட்டம் 91-வது நாளாகத் தொடர்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.

முன்னதாக திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சீமான். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் ஆய்வு முடிவின் அறிக்கையை வெளியிட்டார்.

ஆய்வு முடிவு – படிக்க >>>

செய்தியாளர் சந்திப்பு – திருச்சி: https://www.youtube.com/watch?v=vedPndvDtX8

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், “தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் அங்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாக, மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். 10 நாள்களுக்கு முன்பு, எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதால், அதிர்ச்சியடைந்த மக்கள், போராட்டம் நடத்தினர். அவர்களைப் போலீஸார் நடத்திய விதம் கடுமையான கண்டனத்துக்குரியது. அங்கு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இந்நிலையில், கதிராமங்கலத்தில் உள்ள நிலத்தடி நீரை எங்கள் சொந்த முயற்சியில் அரசு ஆய்வகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பினோம்.

அங்குள்ள குடிநீரைப் பயன்படுத்தினால் புற்றுநோய், தோல் வியாதிகள் வரும். இந்த ஆய்வறிக்கையை முறையாக நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று வழக்குத் தொடர உள்ளோம். தற்போது கதிராமங்கலம் தீவாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி, உலக அளவில் தரகராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக அரசியல்வாதிகள் இந்திய அளவில் தரகர்களாக செயல்படுகின்றனர். அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுப்பதால், தமிழ்நாடு கடந்த 25 வருடங்களாக தனி நாடாக உள்ளது. தமிழகத்தை 2 மாநிலமாக மத்திய அரசு பிரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

திரைப்படத்துக்கு ஏற்கெனவே இருந்த அதிகக் கட்டணம் காரணமாகப் பலரும் திருட்டு சி.டி-யில் படம் பார்த்து வந்தனர். இதனால் தமிழ் சினிமா நலிவடைந்து வருகின்றது என்கிற குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது இன்னும் கூடுதலாக வரி விதித்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரியில் மாநில அரசு விதித்த 30 சதவிகித வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் எதிர்க்கிறேன். மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி, மொத்த வரிகளைக் குறைக்க முன்வரவேண்டும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பையும், அந்நிய முதலீட்டையும் காங்கிரஸ்தான் முதலில் கொண்டுவந்தது. எனவே காங்கிரஸும் பி.ஜே.பி-யும் ஒரே தராசின் இரு தட்டுகள்தான்.

தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சிதான் நடைபெறுகிறது. இதனால், இந்த அரசை மத்திய அரசு கலைக்காது. ஆனால், தற்போதைய நிலவரப்படி தேர்தல் நடைபெற்றால், தி.மு.க-தான் வெற்றி பெறும்” என்றார் தடாலடியாக.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான், மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசினார். சீமானின் அனல் பறக்கும் பேச்சால், நெடுவாசல் போராட்டக்களம் தீவிரமடைந்துள்ளது!

நன்றி: விகடன் http://www.vikatan.com/news/tamilnadu/95215-dmk-will-win-in-next-election-says-seeman.html

 

முந்தைய செய்திஒரத்தநாடு தொகுதி சார்பில் வெள்ளேரி தூர்வாரும் பணி: சீமான் நேரில் ஆய்வு
அடுத்த செய்திஇனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம்! தூரிகைப்போராளி ஓவியர் வீரசந்தானம் – சீமான் புகழாரம்!